நேர்மயமாக்குதல்
நேர்மயமாக்குதல் என்பது விழிப்புணர்வுடனும், நிலையான முயற்சிகள் மூலமும் நம்மில் உள்ள எதிர்மறை குணங்களை மாற்றுவதாகும். அது எப்பொழுதும் எதிர்பார்ப்பில்லாத அன்பு, பேரின்பம் மற்றும் நல்லிணக்கத்தை வெளிப்படுத்துவதாகும்.
நமது தமோ மற்றும் ரஜோ குணங்களை சத்வ குணமாக மாற்றுவதே நேர்மயமாக்குதலின் நோக்கமாகும்.
நேர்மயமாக்குதல் நம் வாழ்விலும், வாழ்க்கைச் சூழ்நிலைகளிலும் பக்குவமான அணுகுமுறையைக் கடைபிடிக்க உதவுகிறது. இது அனைத்து நன்மைகளையும் நல்குவதோடு நம்மில் உள்ள மேன்மையான பண்புகளை வெளிக் கொணர்கிறது.
நேர்மயமாக்குதல் என்பது நேர்தன்மையான சிந்தனை மட்டுமல்ல உடல், மனம், புத்தி ஆகிய அனைத்து நிலைகளிலும் நேர்தன்மையுடன் இருக்க முயற்சிகளை மேற்கொள்வதாகும். இது எதிர்மறை குணங்களை அகற்றுதல் மற்றும் நேர்தன்மை வாய்ந்த குணங்களை படிப்படியாக நிலைநிறுத்துதல் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும்.
தொடர்ந்து வாசிக்க ...தியானமும், நேர்மயமாக்குதலும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இரண்டும் ஒன்றுக்கொன்று உதவியாகவும், உறுதுணையாகவும் இருக்கின்றன. முக்கியமாகக் கடினமான மற்றும் சோதனையான சூழ்நிலைகளில், நேர்மயமாக்குதலை கடைபிடிக்க தியானம் மன வலிமையையும், உறுதியையும் அளிக்கிறது. நேர்மயமாக்குதல் ஆழ்ந்து தியானிக்கவும், சமாதி நிலையை எளிதில் அறிந்துணரவும் உதவுகிறது. நேர்மயமாக்குதல் மற்றும் தியானத்தின் ஒருங்கிணைந்த முயற்சியால் மட்டுமே நம்மில் உள்ள அரிஷத்வர்க்கங்களை களைய முடியும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
நேர்மயமாக்குதல் சத்வ குணத்தைத் தரும் அதே வேளையில், தியானமானது அனைத்து குணங்களையும் கடந்து இறுதி விடுதலை அல்லது முக்தியை அடைய நம்மைத் தகுதியடையச் செய்கிறது. எனவே, நேர்மயமாக்குதல் மற்றும் தியானம் ஆகிய இரண்டிற்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, ஒருங்கே பயிற்சி செய்யப்பட வேண்டும். அவை நமது லௌகீக மற்றும் ஆன்மிக முன்னேற்றத்திற்கு முழுமையான மற்றும் சமமான பார்வையை வழங்கும் ஆன்மிக சாதனையின் இரு கண்கள் போன்றவை.
நம்மை நேர்மயமாக்குவதற்கு பல வழிகள் உள்ளன மற்றும் நேர்மயமாக்குதலுக்கு எவ்வித வரையறையும் இல்லை. கீழே சில நிரூபிக்கப்பட்ட வழிகள் உள்ளன. அவை அனைவராலும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பயிற்சி செய்யப்படலாம்.
நேர்மயமாக்குதல் என்பது நேர்தன்மையான சிந்தனை மட்டுமல்ல உடல், மனம், புத்தி ஆகிய அனைத்து நிலைகளிலும் நேர்தன்மையுடன் இருக்க முயற்சிகளை மேற்கொள்வதாகும். இது எதிர்மறை குணங்களை அகற்றுதல் மற்றும் நேர்தன்மை வாய்ந்த குணங்களை படிப்படியாக நிலைநிறுத்துதல் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும். நம்மை நேர்மயமாக்குவதற்கு பல வழிகள் உள்ளன மற்றும் நேர்மயமாக்குதலுக்கு எவ்வித வரையறையும் இல்லை. கீழே சில நிரூபிக்கப்பட்ட வழிகள் உள்ளன. அவை அனைவராலும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பயிற்சி செய்யப்படலாம்.
வாசிக்க ஒவ்வொன்றையும் கிளிக் செய்யவும்
இயமங்கள் என்பவை சுய கட்டுப்பாட்டிற்கான ஒழுக்கநெறிகள் ஆகும். இவற்றை உலகத்தோடு ஒன்றி வாழும் பொழுது தான் செயல்படுத்த முடியும். ‘பிரபஞ்ச நெறிமுறைகள்’ எனப்படும் இவற்றை, எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் பின்பற்றலாம். பரிந்துரைக்கப்பட்ட ஐந்து இயமங்கள் கீழ்கண்டவாறு விளக்கப்பட்டுள்ளன.
அஹிம்சை அல்லது வன்முறையின்மை என்பது சிந்தனை, சொல் மற்றும் செயலில் வன்முறை இல்லாதிருத்தல் ஆகும். தன்மீது கடுமையாய் இல்லாதிருத்தலும் ஆகும்.
சத்தியம் அல்லது உண்மைதன்மை என்பது எல்லா நேரங்களிலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் உண்மையாக இருப்பதாகும். இது எல்லாப் பொய்களையும் புறக்கணித்தல் ஆகும்.
அஸ்தேயம் அல்லது கள்ளாமை என்பது பொருட்கள், உறவுகள், அறிவு, சிந்தனைகள் என அனைத்து விதமான களவிலிருந்தும் தன்னை விலக்கிக் கொள்வதாகும்.
பிரம்மச்சரியம் என்பது எல்லா நேரத்திலும் இறை நிலையோடு ஒத்திசைந்து வாழ்வதாகும். மேலும், இது கற்புடைமை அல்லது பாலியல் கட்டுப்பாட்டைப் பேணுவதாகும்.
அபரிகிரஹம் என்பது பேராசையிலிருந்து விலகி இருத்தல்; தேவைக்கு அதிகமாக பொருட்களைக் குவித்து வைக்காதிருத்தல் மற்றும் தன்னுடமையற்ற நிலையாகும்.
நியமம் என்பது ‘தனிமனித நெறிமுறைகள்’ ஆகும். பரிந்துரைக்கப்பட்ட ஐந்து நியமங்கள் கீழ்கண்டவாறு விளக்கப்பட்டுள்ளன.
சௌச்சம் அல்லது தூய்மை என்பது புறத்தூய்மை மற்றும் அகத்தூய்மையைக் குறிக்கிறது. வெளிப்புறத் தூய்மை என்பது நம் உடலையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் ஆகும். அதே நேரத்தில், அகத்தூய்மை என்பது எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் ஆகும்.
சந்தோஷம் என்பது மனநிறைவு மற்றும் மன அமைதியின் விளைவாக ஏற்படும் ஆனந்தம் அல்லது மகிழ்ச்சியாகும்.
தவம் என்பது தீவிரமான தியானமாகும். இதைப் புறத்தவம் மற்றும் அகத்தவம் என இரண்டாகவும் கூறலாம். எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதின் மூலம் ஐம்புலன்களையும் கட்டுப்படுத்துதல் புறத்தவம் ஆகும். பெருங்குழப்பத்திற்கு மத்தியிலும் அமைதியாக இருத்தல், விடாமுயற்சி, தியாக மனப்பான்மை முதலியவை அகத்தவமாகும். உடலாலும், மனதாலும் கையாளும் சகிப்புத்தன்மை, ஒன்றுக்கொன்று உதவுகிறது.
ஸ்வாத்யாயம் என்றால் சுய பரிசோதனை என்று பொருள். இது புனித நூல்களைப் படிப்பது மட்டுமல்ல, ஒருவர் தனது பழக்கவழக்கங்கள் மற்றும் மனதின் செயல்பாடுகளையும் தொடர்ந்து கவனித்தல் ஆகும்.
கடவுள், ரிஷிகள் அல்லது குருவிடம் முழுமையாகச் சரணடைதலே ஈஸ்வரபிரணிதானமாகும். மேலும் இது நமது செயல்களினால் அடையும் எந்தவொரு பலனையும், இறை விருப்பமாக எண்ணி முழுமையாக ஏற்றுக்கொள்வதும் ஆகும்.
மன்னித்தல் ஒரு சிறிய செயலாகத் தோன்றலாம், ஆனால், அதில் தெய்வீக வாழ்வின் ரகசியம் அடங்கியுள்ளது.
மற்றவரை மன்னித்தல் மற்றும் மற்றவரிடம் மன்னிப்புக் கோருதல், நமது மனத் தடைகள் பலவற்றை நீக்கவும், உள்மனக் காயங்கள் பலவற்றை ஆற்றவும், தன்மாற்றம் அடையவும் உதவுகிறது. மேலும், நம் ஆழ்மனதில் புதைந்துள்ள கடந்த கால மனக்காயங்கள், கோபங்கள், துரோகங்கள் மற்றும் துன்பங்களின் பதிவுகளிலிருந்து விடுபட வழிவகுக்கிறது.
உங்களைப் புண்படுத்திய அனைவரையும் மன்னித்து, அந்த நினைவுகளை உங்கள் மனதிலிருந்து அகற்றுங்கள்.
நீங்கள் தீங்கிழைத்த அனைவரிடமும் மன்னிப்புக் கோருங்கள்.
கடந்த காலத்தில் நீங்கள் அறிந்தும், அறியாமலும் நிகழ்ந்த எதிர்மறையான செயல்களுக்கு உங்களையும், மற்றவர்களையும் மன்னியுங்கள்.
தியானத்திற்குப் பிறகு மனம் அமைதியாக இருக்கும்போது இந்தப் பயிற்சியைச் செய்வது நல்லது. உங்களையும், மற்றவர்களையும் வாழ்த்துங்கள்; அவர்கள் அனைவரும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கத்துடன் இருக்க வாழ்த்துங்கள்.
இப்பயிற்சி நம்முள் உள்ள தடைகள் பலவற்றை நீக்க உதவுவதோடு, ஆன்மிக சாதனையில் விரைவான முன்னேற்றத்தையும், நம் வாழ்வில் நிலையான நன்மாற்றங்களையும் அளிப்பதைக் காணலாம்.
வாழ்த்துதல் என்பது இறைவனின் அருள் ஆற்றலை நம் வழியாக மற்ற உயிர்களுக்குச் செலுத்துவதை அனுமதிக்கும் செயலாகும். இது இயல்பான, மேன்மையான செயலாகும். நாம் ஒருவரை ஒருவர் வாழ்த்திக்கொள்ளும் பொழுது இறைவனின் கருவிகளாகிறோம்.
நம்மை நாமே வாழ்த்தலாம். நம்மிடம் இல்லாததைப் பற்றிக் குறை கூறுவதற்குப் பதிலாக, நம்மிடம் ஏற்கனவே இருப்பதைக் கொண்டு மகிழலாம் . இந்த எண்ணம் நிலைபெற்றால், நம் வாழ்க்கை மாற்றம் பெறுகிறது, நாம் மிகவும் நிறைவான, மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்க்கையை வாழ்வோம். நம் அன்றாட வாழ்வில் கண்களுக்குப் புலப்படாத இறைவனின் உதவிக் கரத்தை நாம் கவனித்துணரும்பொழுது அது நமக்குப் பணிவை நல்குகிறது. மேலும், பெரியோர்கள், நம் நலனை விரும்புபவர்கள், குரு மற்றும் கடவுள் ஆகியோரிடம் ஆசி பெறுவது பணிவு மற்றும் சரணாகதி மனப்பான்மையை நமக்குள் வளர்க்கிறது.
தியானத்திற்குப் பிறகு மனம் அமைதியாக இருக்கும்பொழுது, அனைவரையும் மனதார வாழ்த்தலாம்.
உங்களையும் பிறரையும் வாழ்த்துங்கள்.
நீங்களும் உலகில் உள்ள அனைவரும் நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், வளமான வாழ்க்கை, மெய்ஞானம், மனமகிழ்ச்சி மற்றும் அமைதி இவையனைத்தும் பெற்று வாழ்வோம் என வாழ்த்துங்கள்.
நம் குடும்பம், சுற்றம், நட்பு, நம்முடன் பணிபுரிவோர், நம் நாடு மற்றும் உலகத் தலைவர்களையும் வாழ்த்துங்கள்.
இந்தப் பயிற்சியை நாம் முழு மனதுடன் செய்யும்போது, அனைத்துவிதமான குறுகிய மனப்பான்மை, ஒற்றுமையின்மை, கருத்து வேறுபாடுகள் அனைத்தும் மறைந்துவிடும். நாம் தெய்வாம்சம் பொருந்தியவர்களாக மாறுகிறோம்.
சங்கல்பம் என்பது மிகவும் சக்திவாய்ந்த, நேர்மயமாக்கலுக்கான பயிற்சியாகும். எந்தவொரு எதிர்மறையான சிந்தனை முறை அல்லது பழக்கவழக்கங்களையும் இந்தப் பயிற்சியின் மூலம் மாற்றலாம். இது நமது ஆழ் மன நிலையில் வேலை செய்கிறது, எனவே, மனம் அமைதியாக இருக்கும்போது அல்லது தியானத்திற்குப் பிறகு இதைப் பயிற்சி செய்யலாம்.
சங்கல்பம் அல்லது ஆழ்மனக் கட்டளைகள் என்பது நமது விருப்பங்கள் நிறைவேறும் வரை விருப்பமான எண்ணங்களை வலுப்படுத்தும் ஒரு மனப் பயிற்சியாகும். இது மனதில் தோன்றும் கருப்பொருளைக் கண் முன் தோன்றும் பருப்பொருளாக்கும் அறிவியல் செயல்முறையாகும். இது பொதுவாகச் சக்திவாய்ந்த காட்சிப்படுத்தலுடன் ஒருங்கிணைந்த பயிற்சியாகும்.
உடல் ஆரோக்கியம், அமைதியான மனம், கூர்மையான புத்தி மற்றும் ஆத்ம ஞானம் அடைதல் போன்ற ஆன்மிக இலக்குகளை அடைய ஆன்மிக சாதகர் இந்தச் சங்கல்ப சக்தியைப் பயன்படுத்தலாம்.
சிந்தித்தாராய்தல் என்பது திறந்த மனதுடன் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை அல்லது தலைப்பை நோக்கிச் சிந்தனையைச் செலுத்துவதாகும். இது புதிய ஞானம் பெற நம் மனதை விரிவுபடுத்துகிறது. இது நமக்குப் பணிவை தருவதோடு மட்டுமல்லாது, புதிய ஆக்கபூர்வமான சிந்தனைகள் மற்றும் ஞானத்தைப் பெறும் கருவியாகவும் (channel)மாற உதவுகிறது.
சிந்தித்தாராய்தல் நம்முள் குறுகிய மனப்பான்மை மற்றும் ஒரேமாதிரியாகச் சிந்திக்கும் தன்மையைக் களைகிறது. இது ஒரு விஷயத்தை நாம் புதிய கண்ணோட்டத்தில் பார்க்கவும், அதைப் பற்றிய புதிய கோணத்தை அறியவும் உதவுகிறது.
தற்சோதனை என்பது நமது சிந்தனை, சொல் மற்றும் செயல்களைத் தூய சாட்சி பாவத்தில் இருந்து கவனித்தல் ஆகும். நாம் ஆன்மிகத்தில் தொடர்ந்து வளர்ச்சியடைந்து, முழுமையாக நேர்தன்மை உடையவராக மாறும் வரை, நமது சிந்தனை, சொல் மற்றும் செயல்களைக் கவனித்து, ஆராய்ந்து, சரிசெய்வது அல்லது செம்மைப்படுத்துவது தற்சோதனை ஆகும்.
தற்சோதனை என்பது மிகவும் சக்திவாய்ந்த பயிற்சியாகும். இது இல்லாமல் நாம் இயமம் மற்றும் நியமத்தைப் பின்பற்றவோ அல்லது நமது அரிஷத்வர்கங்களை (ஆறு எதிர்மறை குணங்களை) மாற்றவோ முடியாது.
தற்சோதனை என்பது தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய பயிற்சியாகும். ஒவ்வொரு நாளும் நமது அனுபவங்களைப் பதிவுசெய்து, சிந்தித்தாராய்ந்து நம் ஆன்மிக முன்னேற்றத்தைக் கண்காணிக்க ஆன்மிக குறிப்பேட்டை பயன்படுத்தலாம். தற்சோதனை நமது ஆன்மிக முன்னேற்றத்தை விரைவுபடுத்துகிறது. ஆத்ம ஞானம் எனும் இலக்கை நோக்கி நமது உடல், மனம் மற்றும் புத்தியை நெறிப்படுத்துகிறது.
'சத்' என்றால் 'நல்ல' எனப் பொருள். சத்சங்கம் என்பது இறைவனை நாடும் நல்லோர்களின் உன்னதச் சங்கமமாகும்.
குருவும் ஆன்மிக சாதகர்களும் அவ்வப்பொழுது ஒன்று சேரும் சத்சங்கத்தில் இறைநிலையில் இருப்பதற்கான பெரியதொரு வாய்ப்பு அமைகிறது. நமது ஆன்மிகப் பயணத்தில், குறிப்பாக நமது வாழ்வில் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டு நமது மனம் அல்லது உடல் சோர்ந்திருக்கும்பொழுது, நம்பிக்கை அளித்துத் தொடர்ந்து உறுதியுடன் முன்னேறிச் செல்லச் சத்சங்கம் உதவுகிறது. சத்சங்கத்தின் மூலம் நாம் நமது இலட்சியத்தை முதன்மைப்படுத்தி, இலக்குகளை அமைத்துக் கொள்ளவும், ஆன்மிக சாதனையின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதித்துக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும், புதிதாகக் கற்றுக்கொள்ளவும், கற்றதில் பயனற்றதை விட்டுவிடவும், மேலும் நாம் ஆன்மிக வாழ்வில் முன்னேறிச் செல்லவும் முடிகிறது.
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...